மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

இறைவன் திருவுருவப் படைப்புகள்...



இறைவனது திருவுருவங்களை நின்ற, இருந்த, கிடந்த மற்றும் கூத்தாடிய கோலங்களில் படைக்கின்றனர். இவற்றில் நின்ற கோல இறையுருவை "ஸ்தானக மூர்த்தி" என்றும், ஒரு காலைக் கீழ்நோக்கி நீட்டியபடி அமர்ந்திருப்பதை "சுகாசன மூர்த்தி" என்றும், கிடந்த கோலத்தில் இருக்கும் இறையுருவை "சயன மூர்த்தி" என்றும் நடனமாடும் கோலத்தில் உள்ள இறையுருவை "நிருத்த மூர்த்தி" என்றும் அழைப்பார்கள். இந்த நான்கு நிலைகளில் நின்ற, இருந்த கோலம் எல்லா இறையுருவங்களுக்கும் பொதுவானதாக அமைகின்றது. இதில் அமர்ந்த கோலத்தில் சுகாசனம், வீராசனம், பத்மாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், லலிதாசனம் என்ற ஆறு ஆசனங்கள் சிற்பங்களில் பயன்படுத்தப் படுகின்றன. அடுத்ததாகக் கிடந்த கோலம் விஷ்ணுவுக்கே பெரிது உரித்தான கோலமாக அமைகிறது. மேலும் கிடந்த கோலத்தில் முழுவதும் கிடத்தல் சமசயனம் என்றும், பகுதிக் கிடத்தல் அர்த்தசயனம் என்றும் இரு வகைகள் உண்டு. அடி முதல் முடி வரை உடல் முழுவதும் இருக்கையில் கிடப்பது முழுதும் கிடத்தலாகும். அடி முதல் இடை வரையுள்ள  உடல் கிடந்து அதற்கு மேலுள்ள உடல் பகுதி சற்று நிமிர்ந்திருப்பது அர்த்த சயனம் எனப்படும். கூத்தாடிய கோலம் என்பது சிவபெருமான், காளி, பிள்ளையார், கண்ணனது காளிங்க நர்த்தனம் முதலிய சிற்பங்களுக்கு உரியதாக இருக்கிறது.

ஆசனங்களை "சிவாலயத் திருமேனிகள்" எனும் நூல் கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.

1. சமபாத ஸ்தானகம்
2. வைதஸ்திக ஸ்தானகம்
3. அர்த்த வைதஸ்திக ஸ்தானகம்
4. காயோத் சர்க்கம்
5. சுகாசனம்
6. பத்மாசனம்
7. அர்த்த பத்மாசனம்
8. லலிதாசனம்
9. மகாராச லீலாசனம்
10. வீராசனம்
11. உத்குடியாசனம்
12. யோகாசனம்
13. ஸ்வஸ்திகாசனம் (அமர்ந்த)
14. கருடாசனம்
15. வைராக் ஸ்தானகம்
16. வைஷ்ணவம்
17. ஸ்வஸ்திகாசனம் (நின்ற)
18. ஆலிடாசனம்
19. பிரத்யாலீடாசனம்
20. ஊர்த்துவஜானு
21. ஏகபாதஸ்தானகம்
22. சயனாசனம்