மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


எறும்புகளின் வாழ்க்கை.



உலகில் உயிர்வாழும் பூச்சி இனங்களில் 10 இலட்சத்திற்கும் மேலான இன வகைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூச்சி வகைகள் அனைத்தும் 6 கால்களையும் மூன்று பகுதிகளில் அமைந்த உடல் அமைப்பினை பொதுவாகவும் கொண்டுள்ளன. எறும்பு, தேனீ, குளவி, கறையான் என்பன மிகவும் திட்டமிடப்பட்ட சமூக அமைப்பில் இயங்குகின்ற போதிலும் எறும்புகள் கொண்டுள்ள அமைப்பு மிக விசேடமானது. எறும்புக் குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும்.

ஒர் எறும்புக் குழு அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. சில குழுக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தனியன்களை கொண்டிருக்கும் அதேவேளை, சில குழுக்கள் பல மில்லியன் எண்ணிக்கையிலான தனியன்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘அரசி' (queen) என அழைக்கப்படும் பெண் தனியன்களும், சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘சோம்பேறிகள்' (drones) என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனப்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers) ‘போராளிகள்' (soldiers) ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனப்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சந்ததியைப் பெருக்குவதில் பங்கெடுக்கும் என்கிறார்கள்.  எறும்பு குறித்த மேலும் சில தகவல்கள்;

  • அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வேலையாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும், ஆண் எறும்பு சிலமாதமும் உயிர்வாழ்கின்றன. (பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.)

  • ஒரு எறும்புக் கூட்டத்தில் (கூட்டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.

  • ஒரு கூட்டத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும். அதேவேளையில் ராணி இல்லாது எறும்பு கூட்டம் இருப்பதும் இல்லை.

  • எறும்பு இனமானது மிகச் சிறியது முதல் 5 சென்டிமீட்டர் (2அங்குலம்) வரை உள்ளன.

  • 10,000 மேலான வகைகளில் உள்ள எறும்புகளின் உணவானது தானியம், பங்கஸ், தேன் என பல வகைகளில் அடங்கும்.

  • மிகவும் சிறந்த மோப்ப சக்தி (வாசனை நுகரும் சக்தி), கண் பார்வை உடைய எறும்புகளுக்குசுவாசப்பைகள் இல்லை.

  • எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.

  • எறும்பு பற்றிய கற்றல் (ஆராய்ச்சி) myrmecology என அழைக்கப்படுகின்றது.

  • எறும்பின் மூளையில் 250, 000 கலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • உலகின் மூன்றில் ஒரு பங்கு எறும்புக கூட்டம் அமேசான் காட்டினில் இருப்பதாக ஆராய்ச்சிகள்தெரிவிக்கின்றன.

  •  மிகவும் திடகாத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதனம் உள்ளதுமான பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது.

  • குடியிருப்பு இடங்களாக நிலம், மரம், நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது மிகச்சிறந்த உயிர் தப்பி வாழும் (survival) உயிரினங்களில் முக்கியமானதகவும் உள்ளது.

  • எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.