மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


கிறிஸ்துமஸ் மரம்



கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் திருநாளுடன் தொடர்புடைய பிரபலமான ஒன்றாகும். பொதுவாக பசுமை மாறா ஊசியிலை கூம்பு மரங்கள் வீட்டுகுள்ளேயோ வெளியேயோ நிறுத்தப்பட்டு கிறிஸ்துமஸ் விளக்குகளாலும் பிற கிறிஸ்துமஸ் அழகூட்டும் பொருட்களாலும் அழகூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு முன் சில நாட்களில் இம்மரத்தின் அழகூட்டப்படுவதைக் காணலாம். மரத்தின் உச்சியில் ஒரு முக்கோணம் அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றையும் சேர்த்துக் காணலாம் அல்லது சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும். ஆமாம். இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்படி தோன்றியிருக்கும்?

எகிப்திய நாட்டு மக்களின் பழமையான கலாச்சாரங்களில் பசுமையை வழிபடுதலும் ஒன்றாய் இருந்தது. அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் மரங்கள் எல்லாம் நிராயுதபாணிகளாய் இலைகளை இழந்து நிற்கையில் பேரீச்சை இலைகளை வெட்டி வந்து வாழ்வின் மறுமலர்ச்சி விழா, அல்லது சாவை வெற்றி கொண்ட விழா கொண்டாடுவது அவர்களுடைய வழக்கம்.

ரோமர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சாத்துர்னாலியா விழாவே விவசாயக் கடவுளை வழிபடும் விழா தான். அந்த நாளை பச்சை இலைகளுடனும், தாவரங்களுடனும் கொண்டாடுவதே அவர்களுடைய வழக்கம். வீடுகளையெல்லாம் இலை தோரணங்களால் அலங்கரிப்பது அவர்களுடைய விழாவின் சிறப்பம்சம்.

பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.

-இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கிறித்துவ மதத்தில், கிறிஸ்துமஸின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம் பெற்றிருக்கலாம் என்கின்றனர் சிலர்.

ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். அதைக்கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு மரம் முளைத்து வளர்ந்ததாக கூறப்படும் கதை ஒன்றுள்ளது. இதனடிப்படையில்தான் கிறிஸ்துமஸ் மரம் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு. 

சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ் காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.

1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்குப் பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரீஸ் நகருக்குக் கொண்டு வந்து விழா கொண்டாடியதால், அன்றிலிருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றுள்ளது என்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.

பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் இருபத்து நான்காம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவு கூறும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள். பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த வழக்கம் இருந்ததாக நம்பப்பட்டாலும், பதினைந்தாம் நூற்றண்டில் இந்த வழக்கம் இருந்தது என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

 இப்படி கிறிஸ்துமஸ் மரம் குறித்து பல செய்திகள் சொல்லப்படுகின்றன.