மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

இனிப்பு வகைகள்



உளுந்து குளோப் ஜாமூன்

தேவையான பொருட்கள்:
  • உளுந்தம் பருப்பு- 200 கிராம். 
  • பச்சரிசி- 50 கிராம்.
  • சீனி- 400 கிராம்
  • நல்லெண்ணெய்- 250 மி.லி
  • உப்பு- தேவையான அளவு.
ெய்முறை:

1. உளுந்தம் பருப்பை நன்கு சுத்தம் செய்து, பச்சரிசியுடன் ஊற வைக்கவும்.

2. உளுந்தம் பருப்பை வடைக்கு ஆட்டுவது போல் ஆட்டவும். மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி ஆட்டி வைத்த மாவை குளோப்ஜாமூன் வடிவில் பொறித்து எடுக்கவும்.

4. சீனியுடன் அளவான தண்ணீர் கலந்து, பிசுபிசுவென்று பக்குவம் வரும்வரை சீனிப்பாகாகக் காய்ச்சவும்.

5. இந்த சீனிப்பாகில் பொறித்தெடுத்த குளோப்ஜாமூனைப் போடவும். 

நன்கு ஊறிய உளுந்து குளோப் ஜாமூன் இனிப்புப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

=====================================================================

கோதுமை அல்வா.

தேவையான பொருட்கள்:
  • சம்பா கோதுமை- 250 கிராம்.
  • சீனி-750 கிராம்.
  • நெய்-250 கிராம்.
  • முந்திரிப் பருப்பு-50 கிராம்
  • ஏலக்காய்- 4
  • எலுமிச்சம்பழம்- சிறியதில் பாதி அளவு
செய்முறை:

1. சம்பா கோதுமையை முதல் நாள் இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் மூன்று முறை ஆட்டிப் பிழிந்து பால் எடுக்க வேண்டும்.

2. இந்தக் கோதுமைப் பாலும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் அளவு இருக்கும்படி எடுத்துக் கொள்ளவும். 

3. மாலையில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இந்த கோதுமைப் பால் தண்ணீர் கலந்த கலவையை ஊற்றி சீனியும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். 

4. அடிப்பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அப்படி ஒட்டினால் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

5. அல்வா பதத்துக்கு வந்து விட்டால் எலுமிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி, நெய்யில் வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு சேர்த்துக் கிளறவும். 

6. சரியான பக்குவத்துக்கு வந்த பின்பு நெய் தடவிய தட்டில் ஊற்றி வைத்து விடலாம்.

சுவையான கோதுமை அல்வா சாப்பிடுங்கள்.

===================================================================== 

தூத் பேடா

தேவையான பொருட்கள்:
  • சீவிய பாதாம் அல்லது பிஸ்தா- 1கப்.
  • பால்-1 லிட்டர்.
  • சர்க்கரை-1/2 கப்
  • வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்.
  • கார்ன்பிளவர் மாவு- 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:

1. அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும்.

2. பாதியளவு பால் வற்றியவுடன் அதில் தண்ணீர் கரைத்த கார்ன் பிளவர், சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறி இறக்குங்கள்.

3. இக்கலவையை மசித்துக் கொண்டு நன்கு ஆற விடுங்கள்.

4. தேவையான வடிவத்தில் பேடாக்கள் செய்து அதன் மேல் ஏலக்காய் துள், சீவிய பாதாமால் அலங்கரிக்கலாம்.

சுவையாகச் சாப்பிட தூத் பேடா ரெடி.

====================================================================

இனிப்பு மைதா போண்டா 

தேவையான பொருட்கள்:
  • மைதா - 100 கிராம் 
  • பாசிப்பருப்பு - 250 கிராம் 
  • வெல்லம் - 150 கிராம் 
  • ஏலக்காய் - 5 எண்ணம் 
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் - சிறிது 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை:

1. பாசிப் பருப்பை நன்றாக வேகவைத்த பின், அதில் வெல்லப்பாகு, ஏலக்காய், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கிளறவும். 

2. கிளறிவைத்த பாசிப்பருப்பை சிறிய உருண்டைகளாக்கவும்.

3. மைதாவில் சிறிதளவு உப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து மாவாகப் பிசையவும்.

4. வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்தவுடன் பாசிப்பருப்பு உருண்டைகளை மைதா மாவில் நன்றாக முக்கி எடுத்து எண்ணெய்யில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்

இனிப்பான மைதா போண்டா சாப்பிடுங்கள்!

=======================================================================


பட்டர் பாதுஷா

தேவையான பொருட்கள்:
  • அரிசிமாவு - 200 கிராம் (பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பின் ஈரம் போக துணியில் உலர வைத்து நல்ல மிருதுவான மாவாக அரைத்து , சலித்து வைத்தால் நல்லது)
  • வெண்ணெய் - 100 கிராம்
  • சர்க்கரை - 500 கிராம்
  • எண்ணெய் - 300 மி.லி
செய்முறை:

1. சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து மிருதுவாக்கிக் கொள்ளவும். 

2. இலேசான ஈரத்துடன் இருக்கும் அரிசி மாவுடன் வெண்ணெய் கலந்து பிசைந்து தடிமனான வட்டமாகச் செய்து கொள்ளவும்.

3. அதைக் காய வைத்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

4. பொரித்தெடுத்து சூடாக இருப்பதை அப்படியே சர்க்கரைத்
தூளில் புரட்டி எடுக்கவும்.

* இதில் நடுவில் அழகுக்காக செர்ரி பழம் வைத்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

சுவையான பட்டர் பாதுஷா சாப்பிட்டுப் பாருங்கள்!

=====================================================================


ஆடிக்கும்மாயம்

தேவையான பொருட்கள்:
  • முழு வெள்ளை உளுந்து - 300 கிராம்
  • பச்சரிசி - 75 கிராம்
  • நெய் - 225 மி.லி
  • கருப்பட்டி - 250 கிராம்
  • சர்க்கரை - 250 கிராம்
செய்முறை:

1. உளுந்து, அரிசி ஆகியவற்றைத் தனித்தனியே சிவக்க மணம் வரும் வரை வறுக்கவும். ஆற வைத்து மாவு போல் அரைக்கவும்.

2. தண்ணீர் 300 மி.லி அளவு எடுத்து கருப்பட்டி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரைந்து விடும் வரை கொதிக்க வைக்கவும்.

3. கருப்பட்டி, சீனி கலந்த பாகுடன் மாவைச் சேர்த்து வைக்கவும்.

4. கனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு மாவை சேர்த்து கிளறவும்.

5. மிதமான நெருப்பில் வைத்து கையில் ஒட்டாமல் வரும்போது எடுத்து விடவும்.

* இதில் வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

நகரத்தார் குடும்பங்களில் இந்த ஆடிக்கும்மாயம் ஒரு சுவையான இனிப்பு. நகரத்தார் இல்லத் திருமணங்களின் போது பரிமாறப்படும் உணவுகளில் இந்தக் கும்மாயம் ஒன்றாக இருக்கிறது.

====================================================================


மாம்பழ அல்வா

தேவையான பொருட்கள்:
  • மாம்பழம் -  1(கனிந்தது)
  • ரவை - 150 கிராம்
  • சர்க்கரை - 150 கிராம்
  • நெய் - தேவையான அளவு
  • முந்திரிப் பருப்பு - சிறிது
  • ஏலக்காய்த்தூள் - சிறிது
செய்முறை:

1. மாம்பழத்தைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த விழுது குறைந்தது 300 கிராம் இருக்க வேண்டும்.

2. வாணலியில் ரவையை இலேசாக வறுத்து அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும்.

3. வாணலியில் மாம்பழ விழுதைப் போட்டு சிறு தீயில் இலேசாக வதக்கவும்.

4. அதில் ரவை, சர்க்கரை போட்டு நன்றாகக் கிளறவும். அத்துடன் நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.

5. முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவி நெய் தடவிய தட்டில் ஊற்றிச் சமமாகப் பரப்பி விடவும்.

இந்த மாம்பழ அல்வா மாம்பழச் சுவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

=======================================================================


அதிரசம்

தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி - 1 கிலோ
  • வெல்லம் - 750 கிராம்
  • ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
  • நெய் - 20 மி.லி
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

1. பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.

2. உலர்த்திய அரிசியை அரைத்து மாவை சலித்து வைக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்சவும்.

4. வெல்லப்பாகு கம்பிப் பாகு போல் வரும் போது மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

5. கையில் நெய் தடவி மாவைத் தொட்டால் மாவில் கையில் ஒட்டாமலிருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

6. மாவின் மீது நெய் தடவி ஆறியபின்பு மூடி வைத்து விடவும்.

7. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

8. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களைப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

அதிரசத்தை நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். அரிசிக்குப் பதிலாக தினையரிசி  கொண்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

========================================================================

கிரீம் கேக்

தேவையான பொருட்கள்:
  • முட்டைகள்- 3 எண்ணம்
  • துவர்ப்பான கிரீம் 1 கிண்ணம்
  • சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
  • மைதா மாவு - 1 கிண்ணம்
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
  • சர்க்கரை - 1/4 கிண்ணம்
  • உறைய வைக்கப்பட்ட பட்டர் - 4  தேக்கரண்டி
செய்முறை:

1. முட்டையின்வெள்ளைக்கருவை எடுத்து நுரை வரும்வரை நன்கு அடித்துக் கலக்கவும். அதில் சர்க்கரையும், துவர்ப்புக் கிரீமையும் சேர்த்துக் கலக்கவும்.

2. சாதாரணமாக கேக் செய்யும் முறையைப் போலவே பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை முட்டையுடன் சேர்த்துக் கலக்கவும்.

கேக் தயாரிக்க:

1. மைதா மாவு 1/2 கிண்ணம், சர்க்கரை 1/4 கிண்ணம், உறைய வைக்கப்பட்ட பட்டரை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

2. கேக் தயாரிக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் மெதுவாக தடவவும். ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் மாவுக் கலவையை 20 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அதைக் குளிரூட்டி வெட்டவும்.

கிரீம் கேக் தயாரித்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் இந்த கேக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

========================================================================

ஆரஞ்சு சாக்லேட் கேக்

தேவையான பொருட்கள்:
  • மைதா மாவு - 250 கிராம் (சலிக்கவும்)
  • வெண்ணெய் - 250 கிராம்
  • பொடித்த சீனி - 250 கிராம்
  • முட்டை - 4 எண்ணம்
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி (சலிக்கவும்)
  • ஆரஞ்சு எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
  • இளஞ்சூடான தண்ணீர் - 5 மேசைக்கரண்டி
  • ஆரஞ்சு ஜுஸ் பவுடர் - 3 மேசைக்கரண்டி
சாக்லேட் சாஸ் தயாரிக்க:
  • சிங்கிள் க்ரீம் - 120 மி.லி
  • சாக்லேட் துண்டுகள் - 250 கிராம்
செய்முறை:

கேக் தயாரிக்க:

1. மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.

2. ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.

3. சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சிறிது சிறிதாக வெண்ணெய்க் கலவையில் சேர்த்துக் கொண்டே அடிக்கவும் அல்லது நன்கு கலக்கி விடவும்.

4. ஆரஞ்சு ஜூஸ் பவுடரையும், தண்ணீரையும் நன்கு கலக்கிக் கொண்டு பின்னர் ஆரஞ்சு எசன்ஸையும் சேர்த்து கலக்கவும்.

5. இந்தக் கலவையை ஓவனில் வைத்து 160 டிகிரி C-ல் 25 - 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

6. கேக் வெந்ததும் வெளியில் எடுத்து ஆற வைக்கவும். .

சாக்லேட் சாஸ் தயாரிக்க:

1. சிங்கிள் க்ரீமை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடு செய்யவும்.

2. கொதி நிலை வந்ததும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

3. இளகும் சாக்லேட் துண்டுகளை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

சாக்லேட் சாஸ் தயாரானதும் அதை ஆற வைத்திருக்கும் ஆரஞ்சு கேக் மீது சமமாகத் தடவி விடவும்.  சுவையான ஆரஞ்சு கேக் தயார்.


இந்த ஆரஞ்சு சாக்லேட் கேக்கின் மேல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அலங்கரித்துக் கொள்ளலாம்.  விருந்தினர்களுக்கு அளித்து மகிழலாம்.

========================================================================