மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

விரதங்கள்...

விரதங்கள்

விரதங்களும் அவற்றின் விளக்கங்களும்

விரதமென்பது ஒன்றையே எண்ணி அதில் மனம் நிலைத்திருக்கச் செய்தலாகும். வரிப்பது என்பது விரதம். உணவொழித்திருத்தலும் மிதமாக உண்டலும் தீயன நீக்கி நல்லன உண்டலுமாகிய உணவு நியமமே "விரதம்" என வழங்குகின்றது. இது விரதத்தின் முதற்படியேயல்லாது இதுவே விரதமாகாது. அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பாகும். மனம் பொறிவழி செல்லாது தடுத்தல், புலனொடுக்கம் வாழ்க்கையின் செம்மைக்குத் தேவையானது. பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். "அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்". இன்று உடல்நலம் பேணும் மருத்துவர்கள்கூட வாரத்தில் ஓரிரு நாட்கள் உணவைத் தவிர்ப்பது நன்மை பயக்கும் என்று கூறுகின்றார்கள். உடலின் மூலமாகத்தான் உத்தமனைத் தேடவேண்டும்.

உடலின் இன்றியமையாமையைத் திருமூலர்:

"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே". என்று கூறுவார்.