மழையோ மழை.
பண்டைய தமிழக கிராம மக்கள் ஏன் நகர மக்களும் கூட பயன்படுத்திய மழை பற்றிய சொற்கள் அனைத்தையும் கேட்கும் போது மிகுந்த மன மகிழ்ச்சியும், வியப்பும் ஏற்படுகின்றது. இச்சொற்களையெல்லாம் நாம் தற்போது இழந்து வருகின்றோம் அனேகமாக இழந்தே விட்டோம் என்றே நினைக்கின்றேன். கி. ராஜநாராயணன் கட்டுரைகள் என்ற நூலில், உழவன் சொல் என்ற கட்டுரையில் நான் படித்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள எண்ணியதால் உருவாக்கிய பகுதி இது. நான் மழையின் பெயர்களைப் பற்றிப் பெற்றதைக் கற்றதை நேயர்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
- ஊசித் தூற்றல்
- சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை)
- சாரல்
- தூறல்(தூத்தல்)
- பூந்தூறல்
- பொசும்பல்
- எறி தூறல்
- தூவானம்
- பொடித் தூறல்
- ரவைத் தூறல்
- எறசல்
- பறவல் மழை
- பருவட்டு மழை (மேலெழுந்தவாரியாக)
- அரண்ட பருவம் (கண்டும் காணாத – தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை)
- மழை
- துணை மழை (முதல் மழையைத் தொடர்ந்து இரவோ, மறுநாளோ அதற்கும் அடுத்த நாளோ பெய்வது)
- பே மழை
- நச்சு மழை (இடையில்லாமல் தொடந்து பெய்து கொண்டே இருப்பது)
- வதி மழை (பூமியெல்லாம் சேறாகும்படியாக)
- கல்மழை (ஆலம்கட்டி மழை)
- காத்து மழை (காற்றும் மழையுமாகக் கலந்து பெய்வது)
- சேலை நனைகிறாப்புல மழை
- கோடை மழை
- கால மழை
- தக்காலம் (மழைக்காலம்)
- பாட்டம் பாட்டமாய் (விட்டு விட்டுத் தொடர்ந்து) மழை
- நீரூத்து மழை (தரையிலிருந்தே நீர்கசிந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்படியாகப் பெய்யும் தொடர் மழை)
- வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியான பூமியைச் சாந்தி பண்ண முடியாத மழை)
- அடை மழை
- மாசி மழை (கரிசல் விவசாயிகளுக்கு உகந்த மழை)
- தை மழை (வேண்டாத மழை)
- சுழி மழை ( நெடூகப் பரவலாகப் பெய்யாமல் அங்கங்கே சுழி சுழியாகப் பெய்வது)
- பட்டத்து மழை (சரியான காலத்தில் பெய்வது)
- எல்லைக் கட்டிப் பெய்யும் மழை (ஊரின் எல்லையோடு பெய்து நின்றுவிடும்)
- மகுளிக்கும் மழை (தாகத்தோடு தவித்துக் கொண்டிருந்த மண் நிறைந்த மழைகளினால் மகிழ்ச்சி அடைந்து உள்வாங்கிக் கொண்டது போக மீதி நீரை வெளியே கக்கும் போது மண்ணு மகிளிச்சிருச்சி என்பார்கள்)
- வெள்ளை மழை (பயனில்லாத வீணான மழை)
- வெள்ள மழை
- பரு மழை (கன மழை)
- பருவ மழை
- பத மழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை)
- அப்பு மழை (காலையில் உப்பு மாலையில் அப்பு என்பது சொலவடை. மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது.)